Skip to main content

காவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்

ஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம்.  அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது.  அப்படியான  நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை  மகிழ்ச்சிப்படுத்துவது  என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா. 



இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத்துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள் திரட்டியும் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை அவரின் பேட்டிகளை விட 'உழைப்பு' அதிகம் சொல்கிறது. ஒரு இடத்திலும் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற கவனம் தெரிகிறது.

நடிப்பில் இயல்பான நடிப்பு, மிகை நடிப்பு என மாறுபட்ட விமர்சனங்கள் இன்றும்கூட நிலவுகிறது. ஆனால், இதுதான் நடிப்பு என எல்லோரும் ஒரே பாதையில் செல்லும்போது புதுமை காட்டி அதை மாற்றியமைப்பவன்  மிகப்பெரிய நடிகன் என்பதைக் காட்சியமைப்புகள் நுணுக்கமாகப் பதிகின்றன. சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா என எல்லோரும் நடிப்பைச் சிறப்பித்திருக்கிறார்கள். நாடகக்காரர்களின் இயல்பு வாழ்க்கையும் அதிதீவிர உணர்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். 


இந்தப் படத்தின் இன்னொரு வடிவம் மொழி. அவை பாடல்களாகவும் வசனங்களாகவும் முதிர்ச்சி பெறுகின்றன. கவிஞர் வாலி அவர்கள் அல்லி- அர்ஜுனா நாடகத்துக்கு எழுதிய பாடலில் மொழி கொஞ்சுகிறது. வாலியை நாமும் தமிழும் இழந்திருக்கவேண்டாம். அந்தப் பாடலும் காட்சியமைப்பும் லயித்துப் போகச்செய்யும்.  நாடக மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சில உணர்வுகள் தடுமாறும் மனித உறவுகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் எளிதாய்க் கடத்திச் செல்கிறது. அதிலும் " தாலி கட்டிய தாசியாய் இருப்பதை விட, வெறும் தாசியாய் இருந்துவிட்டுப் போகலாம்" என்கிற வசனம் ஒரு புத்திசாலிப் பெண் பிழையான நோக்கத்துடனான ஒரு ஆணின் காதலை எப்படிச் சரியாக எடைபோடுகிறாள் என்பதை ஆழமாகச் சொல்லுகிற வசனம். காட்சிகளோடு பார்க்கும் போது அது உறுத்தலான வசனம் என்கிற எண்ணம் வராது. ஒரு எழுத்தாளரை தமிழ் சினிமா எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைச் சொல்கிறார்.
     
சேர்க்கப்பட்டிருப்பது தெரியாமல் இயல்பில் இருப்பது, இழைந்துபோவது போலவே இருப்பதுதான் அழகினது வெற்றி. ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆடை வடிவமைப்பாளர்கள்,ஜெயமோகன், வாலி எல்லோரும் வசந்தபாலனின் கற்பனையைக் கண்டுவிட்டவர்கள்.  

இசையைப் பொறுத்தவரை நிறைய ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மானுக்கு தமிழ் சினிமா கொடுத்த பரிசு  இந்தப் படம். பதிலுக்கு ரஹ்மானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை திரைப்படத்தோடு நீங்கள் இசைந்துபோகும் பொழுதுகளில் உணர்வீர்கள். 


இது ஒரு சரித்திரப் படம் என்பதால் தீபங்களை வைத்தே காட்சிகளில் ஒளியைப் பேச வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. குடிசைக் காட்சிகள், தூரக் காட்சிகளில் சரியான இடங்களில் வைக்கப்பட்ட தீபங்கள் அந்தந்த இடங்களை நிரம்பச் செய்கிறது. ஏராளமான காட்சிகள் இரவில் நகர்வது விஷுவல் ட்ரீட். 'ஹேய் மிஸ்டர் மைனர்' பாடலின் காட்சிப்படுத்தல்களில்(Low Angle, High Angle) உள்ள நேர்த்தி பாடலுக்கே மேலும் அழகு.  



வண்ணங்களை விகிதாசாரம் கொண்டு அமைப்பதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். சரித்திரப் படங்களில் மிகவும் முக்கியமானது ஆடை வடிவமைப்பு. பாலாவின் பரதேசிக்கு ஆடை வடிவமைப்புச் செய்த நிரஞ்சனி அவர்கள் நாடகக் கதைக்களத்துக்கு ஏற்றபடி காட்சிகளை வண்ணமாக்கியிருக்கிறார்.   

ஒவ்வொரு படங்களுக்கும் காலம் எடுத்துக்கொண்டு தயார்படுத்திக்கொள்ளும் வசந்தபாலனின் 'வெயில்' , ' அங்காடித்தெரு' போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களின் வரிசையில் வந்து அமர்ந்துகொள்ளும். நல்ல உழைப்பைத் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ